Tuesday, February 16, 2010

குறி நிலம்



தொலைதூரத்தில்
வரைபடப் புள்ளிகளாய் தெரியும்
புகை மலை முகடுகளுக்குப் பின்னுள்ள
நிலத்தின் இதயத்திலிருந்து
கடல் துவங்குவதாகவும்
நிமிர்ந்த குறியின் சாயல்களில்
விரிந்திருக்கும் மணற்வெளியில்
நீர் சலித்த மோகினிகளும்
வனம் சலித்த நீலிகளும்
தழுவிக் கிடப்பதாகவும்
கிராமத்து யட்சியொன்று
அதன் பெரும் ஏக்கத்தை
என்னிடம் கடத்தியது

குறி நிலக் கிளர்வுகளோடு
ஏங்கிச் செத்த நிகழ் வேட்கையின்
கொடுங்கனவில்
இலுப்பை முனியின் நீள்முடியைக்
கைவசப்படுத்திய என் முப்பாட்டன் தோன்றி
அவ்வுன்னத நிலங்களில்
மலங்கழித்துத் திரிவதாய்
கெக்கலித்தான்

அவனையறியாமல் அவனின் விதைப் பையினுள்
தஞ்சம் புகுந்தேன்
காலத்தின் உறைந்த உதடுகளோடும்
புகையிலை வாசங்களோடும் பயணித்து
முடிவின்மையின் சாஸ்வதங்களை முத்தமிட்டபடி
விழுங்கக் காத்திருக்கும்
யோனி நிலத்தினுள் புதைந்து கொள்வேன்.

--
பவுத்திரம் :- http://www.ayyanaarv.com/2010/02/blog-post_16.html